ஜக்கார்த்தா: சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கான தட்டுப்பாடும் தளவாடச் செயல்பாட்டில் குறைபாடும் ஏற்பட்டு வரும் நிலையில், கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை இந்தோனீசியா தன் மக்களுக்குப் போடுவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது.
தென்கிழக்காசியாவில் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கிய நாடுகளில் இந்தோனீசியாவும் ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று அதன் அண்டைநாடுகளுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசிப் பணியைத் துரிதமாக மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறது இந்தோனீசியா.
இந்தோனீசியாவின் 270 மில்லியன் மக்களில் 17.9 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி முழுமையாகப் போடப்பட்டுள்ளது.
பொருளியல் ரீதியாக வட்டாரத்தின் பிரதான நாடுகளைக் காட்டிலும் இந்தோனீசியா பின்தங்கி இருப்பதாக புளூம்பெர்க் தடுப்பூசிக் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்து உள்ளது.
தடுப்பூசிப் பணிகள் மெதுவடைந்துள்ள நிலையில், கொள்ளைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்தோனீசியாவின் முயற்சிகள் கைகூடாமல் போகலாம். $1.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய அதன் பொருளியலை மீட்டுத் தக்கவைத்துக்கொள்ளாமலும் போகலாம். டெல்டா கிருமிப் பரவலாலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முதல் தடுப்பூசியை மட்டும் கிட்டத்தட்ட 32 விழுக்காட்டினர் போட்டுக்கொண்டுள்ள நிலையில் நாடுகளின் பட்டியலின் இறுதி நான்கு இடங்களில் இந்தோனீசியா இடம்பெற்றுள்ளது.
போதுமான தடுப்பூசி இருப்புகள் இருந்தாலும் தடுப்பூசி போடும் மையங்கள் போதுமானதாக இல்லை என்றும் தடுப்பூசியைப் போடுவதற்குப் போதுமான பணியாளர்கள் அவ்விடத்தில் இருப்பதில்லை என்றும் இந்தோனீசிய அரசாங்கத்திற்கு உதவிவரும் கிரிஃப்பித் பல்கலைக்கழகத் தொற்றுநோய் நிபுணர் டிக்கி புடிமேன் கூறினார்.
ஒரு நாளில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைப் போடவேண்டும் என்ற இலக்குடன் இந்தோனீசிய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஆண்டு இறுதிக்குள் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவிவருகிறது.
இந்தோனீசியாவில் தினமும் 100க்கும் மேற்பட்ட கொவிட்-19 உயிரிழப்புகள் பதிவாகின்றன.

