நியூயார்க்: அமெரிக்காவின் மொன்டேனா பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். அதோடு 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிகாகோவிலிருந்து சியேட்டலுக்குச் சென்றுகொண்டிருந்த 'எம்பயர் பில்டர்' வகை ரயில் ஒன்றின் பெட்டிகள் தடம் புரண்டதாக 'எம்ட்ரேக்' நிறுவனம் தெரிவித்தது.
சம்பவம் நடந்தபோது கிட்டத்தட்ட 141 பயணிகளும் 16 பணியாளர்களும் ரயிலில் இருந்ததாக நிறுவனம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
பெட்டிகளில் சிக்கி இருந்தவர்களை வெளியேற்றுவதற்காக மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டனர் என்று கூறப்பட்டது. இதற்கிடையே, சம்பவம் தொடர்பில் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
பெட்டிகளில் உயிருடன் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக அப்பகுதியின் பேரிடர், அவசரகால சேவைகள் ஒருங்கிணைப்பாளர் அமேண்டா ஃபிரிக்கல் கூறினார்.
இந்நிலையில், ரயில் சேவைகளை ஒரு சில பகுதிகளில் ரத்து செய்வதாக எம்ட்ரேக் அறிவித்தது.
எம்ட்ரேக் ரயில்கள் தடம் புரள்வது அரிது என்றாலும் அண்மைய ஆண்டுகளில் உயிர்ச் சேதம் ஏற்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
சவுத் கரோலினாவில் தவறான தடத்தில் சென்ற எம்ட்ரேக் ரயில் ஒன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதிய சம்பவம் 2018ஆம் ஆண்டில் நடந்தது. அதில் மூவர் உயிரிழந்தனர். அதே ஆண்டில் வர்ஜீனியா பகுதியில் குப்பை அகற்றும் வாகனம் ஒன்றின் மீது ரயில் மோதியது. வாகனத்தில் இருந்த ஒரு பயணி உயிர் இழந்தார்.
2015ல் அனுமதிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாட்டை விட இருமடங்கு வேகத்தில் சென்ற ஓர் எம்ட்ரேக் ரயில், ஃபிலடெல்ஃபியாவில் வளைவுப்பகுதியில் தடம் புரண்டது. எட்டு பேர் அதில் பலி. 200க்கும் மேற்பட்டோருக்குக் காயம்.

