ஸ்டோக்ஹோல்ம்: சுவீடனின் கோதன்பர்க் நகரில் உள்ள ஒரு கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, நால்வர் கடுமையாகக் காயமுற்றனர்.
அவர்களில் மூன்று பெண்களும் ஓர் ஆடவரும் அடங்குவர்.
இந்தச் சம்பவம் சுவீடன் நேரப்படி நேற்று காலை நிகழ்ந்தது.
குறைந்தது 16 பேர் மருத்துவ
மனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட கட்டடத்தி
லிருந்து நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
வெடிப்பு வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பின் காரணமாக எந்த அளவுக்குப் பாதிப்பு, சேதம் ஏற்பட்டுள்ளது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வெடிப்புக்கான காரணமும் இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டடத்தில் உள்ள பல வீடுகளும் படிக்கட்டுகளும் சேதமடைந்துள்ளதாக அவர்கள் கூறினர்.
தீயை இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்று சுவீடனின் அவசரகால மீட்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அதை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணி அளவில் வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து, தமது வீட்டின் முன்
மாடத்திலிருந்து வெளியே குதித்ததாக குடியிருப்பாளர்களில் ஒருவரான திருவாட்டி ஜெசிக்கா கோட்டஸ்பர்க்-போஸ்டன் தெரிவித்தார்.
வெடிபொருட்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டில் சுவீடனில் 187 வழக்குகள் பதிவாகின. அவற்றில் பெரும்பாலானவை கையெறி குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. குண்டர் கும்பல்
களுக்கு இடையிலான மோதல்களில் அவை பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

