கோலாலம்பூர்: மலேசிய சிறைகளில் கடந்த ஆண்டிலிருந்து 51,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிறையில் பிறந்த ஒன்பது குழந்தைகள், சிறைக் கைதிகள், சிறை அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.
இந்தத் தகவலை மலேசிய உள்துறை துணை அமைச்சர் டாக்டர் இஸ்மாயில் முகம்மது நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மொத்தம் 51,123 பேர் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சிறைக் கைதிகள், சிறை அதிகாரிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சிறைக் கைதிகள் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போட மலேசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர்எஸ்என். ராயர் கேள்வி கேட்டதை அடுத்து, இந்தத் தகவல்களை துணை அமைச்சர் வெளியிட்டார்.
சிறைக் கைதிகள் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதால் பல வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதை திரு ராயர் சுட்டினார். எனவே, கைதிகள் அனை
வருக்கும் தடுப்பூசி போடுவது முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
சிறைக் கைதிகள், சிறை அதிகாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று டாக்டர் இஸ்மாயில் உறுதி அளித்தார்.
மலேசிய சிறைச்சாலைகளின் கொள்ளளவைவிட அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதை ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுவதாக டாக்டர் இஸ்மாயில் தெரிவித்தார்.
தற்போது புதிய கைதிகள் பிரதான சிறைகளில் அடைக்கப்படாமல் மற்ற இடங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாக அவர் கூறினார். கூடிய விரைவில் இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணப்படும் என்றார்் அவர்.