இங்குள்ள மூன்று உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொவிட்-19 தொற்று அதிகரிப்பின் காரணமாக நேரடி வகுப்புகளைக் குறைத்து வருகின்றன.
இணையம் வழியாக வகுப்புகள் ஊக்குவிக்கப்படுவதாகவும் நேரடி வகுப்புகள் தேசிய பாதுகாப்பு வழிகாட்டிகளுக்கு ஏற்ற வகையில் தொடரும் என்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கூறியது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கடந்த திங்கட்கிழமை முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரை இணையம்வழி வகுப்புகளை நடத்துகிறது.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், அதன் விரிவுரைகள், கருத்தரங்குகள், சிறுவகுப்புகள் ஆகியவற்றை இணையத்தில் நடத்தத் தொடங்கியுள்ளது. செய்முறை வகுப்புகளுக்கும் ஆய்வுக்கூட வகுப்புகளுக்கும் மாணவர்கள் நேரடியாக செல்வார்கள் என்று அது தெரிவித்தது.
கிருமித்தொற்று மீண்டும் பெருகுவதற்கு முன்னரே, வகுப்புகள் பெரும்பாலும் இணையம் வழியாக நடத்தப்பட்டதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் கூறின.