கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கும் குறைவானவர்களின் எண்ணிக்கை, இவ்வாண்டு 400,000க்கு மேல் ஆகிவிட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நேற்று தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 12,000 ஆக இருந்தது. இவ்வாண்டில் இதுவரை 18 வயதுக்கும் குறைவானவரிடையே பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 252,569 பள்ளி மாணவர்களும் 42,831 பாலர் பள்ளி மாணவர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்ட இப்பிரிவினரில் 67 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று திரு கைரி குறிப்பிட்டார்.
"கொவிட்-19 தொற்றுக்கு எதிராக பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது நம் அனைவரது பொறுப்பாகும். தேவையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி அவர்களுக்காக பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கித் தருவதை நாம் உறுதிசெய்திட வேண்டும்," என்று நேற்று நடைபெற்ற இணையக் கருத்தரங்கு ஒன்றில் அவர் கூறினார்.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள தடுப்பூசித் திட்டம் ஒன்றின் வழி, 12 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று திரு கைரி குறிப்பிட்டார்.
இக்குறிப்பிட்ட பிரிவினரில் குறைந்தது 43 விழுக்காட்டினருக்கு கொவிட்-19க்கு எதிரான முதல் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும் போதாது என்றும் மக்கள் தொடர்ந்து தொற்றைத் தவிர்க்கக்கூடிய புதிய வழக்கநிலை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பெற்றோரும் பங்களிக்க வேண்டும் என்றார்.
"சுகாதாரம் என்ற அம்சம், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை நம்பியுள்ளது. அதிலும் கொவிட்-19 தொற்று என்ற நிலையில் பார்க்கும்போது, அனைவருக்கும் பாதுகாப்பு உறுதியாகும்வரை யார் ஒருவருக்கும் பாதுகாப்பு உறுதி இல்லை," என்றார் அமைச்சர் கைரி.

