மணிலா: தனது தவணைக் காலம் முடிந்தவுடன் அரசியலிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டே அறிவித்துள்ளார். நீண்டகாலமாகத் தனக்கு உதவியாளராக இருந்த செனட்டர் பொங் கோ துணை அதிபர் தேர்தலை வெல்வதற்கு வகைசெய்ய அதிலிருந்து விலகிக்கொள்வதாகத் திரு டுட்டர்டே கூறினார்.
துணை அதிபராவதற்குத் தனக்குத் தகுதியில்லை எனப் பெரும்பாலான பிலிப்பீன்ஸ் மக்கள் நம்புவதாகவும், அதையும் தாண்டி போட்டியிட்டால் அது அரசியல் விதிமுறை சட்டத்தை மீறுவதாகும் என்று அவர் கூறினார். அடுத்த ஆண்டு துணை அதிபர் தேர்தலில் திரு டுட்டர்டே போட்டியிடுவதைப் பெரும்பாலான பிலிப்பீன்ஸ் மக்கள் விரும்பவில்லை என்று அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்தது.
திரு கோ, திரு டுட்டர்டேயின் சொந்த நகரான டவாவில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவர் 1989ஆம் ஆண்டிலிருந்து திரு டுட்டர்டேயின் நிர்வாக உதவியாளராக இருந்து வந்துள்ளார். திரு டுட்டர்டேயின் மகளும் டவாவ் நகர மேயருமான சாரா டுட்டர்டே-கார்ப்பியோ அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

