பேங்காக்: தனிமைப்படுத்தும் தேவையின்றி தாய்லாந்தின் புக்கெட் தீவுக்குச் செல்ல வகைசெய்யும் 'சேண்ட்பாக்ஸ்' திட்டம் இப்போது எல்லா நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள எல்லா பயணிகளுக்கும் இது பொருந்தும். இதற்கு முன் திட்டம் கிருமிப் பரவல் அதிகம் இல்லாத நாடுகளுக்கு மட்டுமே திறந்துவிடப்பட்டது.
தென்கிழக்காசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வந்தபோதும் கடந்த ஜூலை மாதத்தில் தாய்லாந்து புக்கெட்டுக்கான இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இம்முயற்சி, இப்போது வெற்றிகண்டுள்ளது. கடந்த புதன்கிழமை நிலவரப்படி புக்கெட்டிற்கு 38,289 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் 0.3 விழுக்காட்டினருக்கு மட்டுமே கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் இத்திட்டம் 1.63 பில்லியன் பாட் தொகையை ஈட்டியது.
இயல்புநிலையில் இதைவிட அதிகமான சுற்றுப்பயணிகளையும் வருவாயையும் புக்கெட் பெற்றது. ஆனால் தற்போதைய சூழலைக் கருத்தில்கொள்ளும்போது முடங்கிக் கிடக்கும் சுற்றுப்பயணத் துறைக்கு புக்கெட்டின் முயற்சி உயிரூட்டுகிறது.
விய்டநாமில் உள்ள ஃபு குவோக் தீவும் இவ்வாறு செய்யும் எண்ணம் கொண்டுள்ளது. இந்தோனீசியாவின் பாலி தீவும் இந்த முயற்சியில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.
மலேசியாவின் லங்காவி தீவு, சென்ற மாதம் 16ஆம் தேதியன்று தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்ளூர் சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டது.