சிட்னி: அனைத்துலகப் பயணங்
களைக் கூடிய விரைவில் மீண்டும் தொடர்வது குறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசுடன் கலந்துரையாடி வருவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
"இல்லத் தனிமை அணுகு
முறையை அடுத்த மாதம் விரைவு படுத்துவது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. திட்டம் நிறைவேறினால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனைத்துலகப் பயணங்கள் எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்பாகவே தொடரலாம்.
"இதன்மூலம் சிட்னி வழியாக வீடு திரும்ப விரும்பும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்களுக்கு இல்லத் தனிமை
உத்தரவு பிறப்பிக்கப்படும்.
"முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்கள் அனைத்துலகப் பயணங்களை மேற்கொள்ளலாம்," என்று திரு மோரிசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி மூலம் தெரிவித்தார்.
அனைத்துலக எல்லைகள் எப்போது திறந்துவிடப்படும் என்று திரு மோரிசன் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று அவை திறந்துவிடப்படக்கூடும் என்று News.com.au தெரிவித்தது.
நீர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே அனைத்துலகப் பயணங்களுக்கான தடை அடுத்த மாதம் நீக்கப்படும் என்று பிரதமர் மோரிசன் இம்மாதத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கிட்டத்தட்ட 100 நாள் முடக்கநிலைக்குப் பிறகு வழக்கநிலைக்குத் திரும்ப சிட்னி தயாராகி வருவதாக அந்நகரின் அதிகாரிகள் கூறினர். இன்று முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோரை வரவேற்க வர்த்தகங்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் மேலும் 477 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கிருமித்தொற்று காரணமாக மேலும் ஆறு பேர் உயிரிழந்தனர்.
இருப்பினும், மாநிலத்தின் மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் பெரும்பாலான வர்த்தகங்களை மீண்டும் திறக்கவும் தயாராக இருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் டோமினிக் பெரோட்டட் கூறினார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கிருமிப் பரவலைத் தடுக்க சமூக இடைவெளி விதிமுறையும் பொது இடங்களில் ஒன்றுகூடுவது தொர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரம்புகளும் தொடரும் என்றார் அவர்.

