ஜகார்த்தா: அதிகமான சுற்றுப்பயணிகளை வரவேற்கும்விதமாக இந்தோனீசியா மேலும் பல நாடுகளுக்குத் தனது எல்லைகளைத் திறந்துவிடவிருக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவின் ஆகப் பெரிய பொருளியலான இந்தோனீசியா, 18 நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தன் நாட்டிற்கு வர அனுமதிக்கவுள்ளது. அத்துடன், குறைந்தபட்ச தனிமைப்படுத்தும் காலத்தையும் எட்டில் இருந்து ஐந்து நாள்களாகக் குறைக்கவுள்ளதாக அமைச்சர் லுகுத் பாஞ்சைத்தான் தெரிவித்தார்.
ஆனால், அந்த 18 நாடுகள் எவை என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இந்தோனீசியா எல்லைக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது. அவ்வகையில், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பாலித் தீவு வரும் 14ஆம் தேதியில் இருந்து வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்குக் திறந்துவிடப்படவுள்ளது.
அந்நாட்டில் இதுவரை 21 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.