மிலான்: ஐரோப்பிய நாடுகளுக்கான நேஷன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, கிண்ணத்தைக் கைப்பற்றியது.
முற்பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்த, பிரான்ஸ் தடுமாறியது.
இரண்டாம் பாதியின் 20வது நிமிடத்தில் மிக்கெல் ஒயர்ஸபல் அடித்த கோலால் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
இருப்பினும், நடுக்கள ஆட்டக்காரர் பால் போக்பாவின் அருமையான செயல்பாடும் இளம் வீரர் கிலியன் எம்பாப்பேயின் துடிப்பான ஆட்டமும் பிரான்சை மீண்டெழச் செய்தன.
தாக்குதல் ஆட்டக்காரர் கரிம் பென்சிமாவும் ஸ்பெயினுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்.
66வது நிமிடத்தில் பென்சிமா போட்ட கோலால் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. ஆட்டம் முடிய பத்து நிமிடங்கள் இருந்தபோது தமது அபாரமான கோல் மூலம் பிரான்ஸ் அணியை முன்னிலை பெறச் சென்றார் எம்பாப்பே.
அதன்பின் வெகுண்டெழுந்து ஆடி, பிரெஞ்சு அணியின் கோல் வலையை முற்றுகையிட்டனர். ஆனாலும், பிரெஞ்சு அணித்தலைவரும் கோல்காப்பாளருமான ஹியூகோ லோரிஸ், ஸ்பெயினின் இரு கோல் முயற்சிகளை அற்புதமாக முறியடித்து, கிண்ணம் தமது அணியின் கைசேர்வதை உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, நடந்த மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் யூரோ கிண்ண வெற்றியாளரான இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தைத் தோற்கடித்தது.

