பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான லங்காவிக்குச் செல்லும் பயணிகள், புறப்
படுவதற்குமுன் கட்டாய கிருமித் தொற்றுப் பரிசோதனை செய்ய தேவையில்லை என்று மலேசிய சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
லங்காவிக்குப் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையங்கள், படகு முனையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது 0.4% பயணிகளுக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டதால், கட்டாய பரிசோதனையை நீக்குவதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.
அக்டோபர் 10ஆம் தேதி நிலவரப்படி, 54,341 சுற்றுலாப் பயணிகள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்
படுத்தப்பட்டதாகவும் அவர்களில் 216 பயணிகளுக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
"லங்காவியில் இருந்தபோது ஒரு சுற்றுலாப் பயணிக்கு மட்டுமே தொற்று அறிகுறிகள் ஏற்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டது.
"லங்காவியிலிருந்து தொற்று பரவவில்லை என்பது தரவுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது," என்றார் அவர்.
ஆனால் கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்வதை ஊக்குவிப்பதாகவும் அவர் சொன்னார்.
அத்துடன் பயணிகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமுமில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, மாநிலங்களுக்கு இடையிலான பயணம் நேற்று முன்தினம் முதல் மீண்டும் தொடங்கியதில் இருந்து மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில்
போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் சொன்னார். நெடுஞ்சாலைகளில் ஒட்டுமொத்தமாகப் போக்குவரத்து 14% அதிகரித்துள்ளது.
மேலும் தரவுகளின் அடிப்படையில் கிருமி பரவுவதற்கான சாத்தியம் குறித்தும் அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் சொன்னார்.