யங்கூன்: மியன்மார் நாணயத்தின் வீழ்ச்சியால் அந்நாட்டின் பொருளியல் சிக்கல் மோசமடைந்து வருகிறது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தால் உணவுப்பொருட்கள், எண்ணெய் ஆகியவற்றின் விலை கூடி, மக்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரின் கியட் நாணயம் அமெரிக்க டாலருக்கு எதிரான அதன் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்துள்ளது. கடந்த மாதம், அது ஆகக் குறைவாக ஒரு அமெரிக்க டாலருக்கு 2,700 என்று பரிவர்த்தனை செய்யப்பட்டது. நேற்று ஒரு மியன்மார் கியட், 1,426.94 சிங்கப்பூர் வெள்ளிக்கு பணப் பரிவர்த்தனை ஆனது.
மியன்மார் நாணயத்தின் மதிப்பைத் தூக்கி நிறுத்த ராணுவ ஆட்சியாளர்கள் தங்களிடமிருந்த அமெரிக்க டாலரை (S$257.4 மில்லியன்) விற்றுவிட்டனர். ஆனால் கியட் நீண்டகால நோக்கில் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டுப் பொருளியல் கடந்த நிதியாண்டில் 18.7% வீழ்ச்சி கண்டது. பணவீக்கமும் வெகுவாக அதிகரித்துள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ஏற்கெனவே அதிகரித்த விலைகள், இம்மாதம் வெகுவாகக் கூடின. அவசியமற்ற உணவை வாங்குவதையும் மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்களைப் பயன்படுத்துவதையும் குறைத்துள்ளதாக மியன்மார் மக்கள் கூறினர்.
ஓய்வுபெற்ற முதியவரான திரு வாட்டி ஆய், வங்கிச் சேமிப்பில் உள்ள பணம் ஓய்வுகாலத்தைச் சமாளிக்க உதவும் என்று நினைத்தார். ஆனால், வங்கிகளில் இருக்கும் பணத்தை வெளியில் எடுக்க ராணுவ அரசாங்கம் 200,000 கியட் (S$140) எனும் உச்சவரம்பை விதித்துள்ளது. பணத்தை எடுக்க வங்கிகளில் வரிசை நீண்டிருக்கிறது. அதனால் கையில் உள்ள காசைக் கொண்டு காலத்தை ஓட்டு வதாக திருவாட்டி ஆய் கூறினார்.