சிட்னி: சிட்னியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் திட்டமிட்டதைவிட விரைவாக, வரும் 18ஆம் தேதி திங்கட்கிழமை மேலும் தளர்த்தப்படலாம் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்த மாநிலத்தின் 80 விழுக்காட்டு மக்கள்தொகைக்கு இந்த வாரயிறுதியில் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று கருதப்படுகிறது.
தடுப்பூசி இலக்கை அடைந்த பின்னர் அடுத்து வரும் திங்கட்கிழமையில் தளர்வுகள் நடப்புக்கு வரும் என்று மாநில அதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர்.
தளர்வு பற்றி இன்று விவாதிக்கப்பட்டு நாளை அறிவிக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் டோமினிக் பெரோட்டெட் ஏபிசி வானொலியிடம் நேற்று தெரிவித்தார்.
கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், கடைகள், கேளிக்கை விடுதிகள் உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இன்னும் கூடுலதாக அனுமதிக்கப்படுவார்கள். அலுவலகங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்காது. திருமணங்களில் விருந்தினர் உச்சவரம்பும் இருக்காது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் சேவைத் துறை ஊழியர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொதுமக்களுடன் தொடர்புகொள்ளும் வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வடக்குப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் மைக்கல் கன்னர் கூறினார். அங்குள்ள சில இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் மிகக் குறைவாக உள்ளது கவலை அளிப்பதாக அவர் சொன்னார்.
பெரும் பரப்பளவு கொண்ட வடக்குப் பிரதேசத்தில் டார்வின், ஆலிஸ் ஸ்பிரிங் நகரங்கள் உள்ளன. பூர்வகுடியினர் அதிகம் வசிக்கும் பகுதி அதுவாகும்.