பெய்ஜிங்: தைவான் அருகே சீனா அண்மையில் நடத்திய ராணுவப் பயிற்சிகள் அத்தீவு அதிகாரபூர்வ சுதந்திரம் பெறுவதை ஊக்குவிக்கும் சக்திகளுக்கு எதிரானது என்றும் அது அமைதியையும் நிலைத்தன்மையையும் காக்கும் 'நியாயமான' நடவடிக்கை என்றும் சீனாவின் தைவான் விவகாரங்களுக்கான அலுவலகம் கூறியுள்ளது.
அந்த அலுவலகத்தின் பேச்சாளர் மா சியாவ்குவாங் நேற்று செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்தார். சீனாவின் ராணுவப் பயிற்சி தைவானுக்கு அமெரிக்கா தரும் ஆதரவுக்கு எதிரானது என்றும் அவர் கோடிகாட்டினர்.
ஆனால் ஊடுருவல்கள் தீவை நெருங்கினால் கடுமையான பதில் நடவடிக்கையை எடுக்கப்போவதாக தைவானிய தற்காப்பு அமைச்சு நேற்று கூறியது.
சீனா, இம்மாதம் முதல் தேதி தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தைவான் அருகே பல ஆகாயப்படை விமானங்களை அனுப்பி வைத்தது.
அந்நாடு, தைவான் தமக்குச் சொந்தமான நிலப்பரப்பு என்று பலஆண்டுகளாகக் கூறிவருகிறது.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான ராணுவப் பதற்றம் 40 ஆண்டுகளில் மிக மோசமான நிலையில் உள்ளதாக தைவானின் தற்காப்பு அமைச்சர் கடந்த வாரம் கூறினார். வரும் 2025ஆம் ஆண்டுக்குள் தைவானுக்கு எதிராக முழுத் தாக்குதலை நடத்தும் ஆற்றலைச் சீனா பெற்றிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.