லண்டன்: உலகக் கிண்ண காற்பந்து தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று அதிகாலை ஹங்கேரியை எதிர்கொண்ட இங்கிலாந்து அந்நாட்டை வெற்றிகொள்ள முடியாமல் திணறி 1-1 என சமநிலை கண்டது.
'ஐ' பிரிவில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ள நிலையில், இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் இருக்கும் போலந்தை விட மூன்று புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணியில் இருப்பது அதற்கு சாதகமான நிலையே.
எனினும், திக்கித் தடுமாறி ஹங்கேரியுடன் சமநிலை கண்டது இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமாக விளங்குகிறது.
ஆட்டம் தொடங்கியபோது போலந்து நாட்டு ரசிகர்களுக்கும் லண்டன் போலிசாருக்கும் இடையே கலகம் மூண்டது. இதில் போலிசாரை அச்சுறுத்திய ஹங்கேரி நாட்டு ரசிகர்களை அடக்க கலகத் தடுப்பு போலிசார் வரவழைக்கப்பட்டனர்.
ஆட்டத்தின் 24ஆம் நிமிடத்தில் இங்கிலாந்தின் லுக் ஷா என்ற ஆட்டக்காரரின் தப்பாட்டத்தால் ஹங்கேரிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரோலண்ட் சாலாய் என்ற வீரர் கோலாக மாற்றி ஹங்கேரிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இதை அடுத்து ஆட்டத்தின் 37ஆம் நிமிடத்தில் 'ஃபிரீகிக்' வாய்ப்பில் ஃபில் ஃபோடன் கொடுத்த பந்தை ஜான் ஸ்டோன்ஸ் என்பவருக்கு டைரோன் மிங்ஸ் என்ற வீரர் தட்டிவிட அவர் இங்கிலாந்து சார்பாக கோல் போட்டு ஆட்டத்தை 1-1 என சமநிலைப்படுத்தினார்.
"ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று கூறலாம். ஆனால் ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்.
"ஹங்கேரிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்தது முட்டாள்தனமானது. சில சமயங்களில் எதிரணிக்கும் நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும். ஹங்கேரியை அந்த நாட்டில் அவர்களுடன் விளையாடியதைவிட இங்கு அந்நாட்டுக் குழு நன்றாகவே விளையாடியது," என்று இங்கிலாந்து மத்திய திடல் ஆட்டக்காரரான டெக்லன் ரைஸ் கருத்துரைத்தார்.
இங்கிலாந்துக் குழுவில் அபார திறமைசாலியான வீரர்கள் இருந்தும் அவர்கள் முழுத் திறனுடன் விளையாடவில்லை என்று காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.