விமானத்தை இயக்கும் முறையை மறந்துபோன சில விமானிகள்

2 mins read
565d41ff-00a2-421c-a6ca-facd8e33fe34
ஒரு நொடி ஏற்படும் மறதிகூட பேரிடருக்கு இட்டுச் செல்லலாம். படம்: ஏஎஃப்பி -

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான விமானப் பயணங்கள் இடம்பெறாததால் பயணிகள் மட்டுல்ல, விமானிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலுக்குப் பின்னர் தற்போது மீண்டும் விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ள அவர்களால் தவறுகள் நிகழ்ந்துள்ளன.

உதாரணத்துக்கு, கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைய விடுப்பு எடுத்துக்கொண்டு பணிக்குத் திரும்பிய விமானி ஒருவர், அதன் இரண்டாவது இயந்திரத்தை இயக்க மறந்துவிட்டார். நல்ல வேளையாக, விமானம் வானில் பறக்கும் முன்னர் அதை நிறுத்திவிட்டார். இல்லாவிட்டால் விபத்து நிகழ்ந்திருக்கும்.

பெருந்தொற்றுச் சூழலால் ஏழு மாதங்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட விமானி ஒருவர், விமானத்தை தரையிறக்க முயன்றார். ஆனால், அதற்கு முன்னேற்பாடாக சக்கரத்தை அவர் கீழிறக்கவில்லை என்று தெரிந்தவுடன், தரையிலிருந்து 240 மீட்டர் உயரத்தில் மீண்டும் விமானத்தை மேலே செலுத்தித் தப்பித்தார்.

சில வாரங்களுக்கு முன்னர், பயணிகள் விமானம் ஒன்று வேறு திசையில் பறந்து சென்றது. அதன் விமானி, கடைசியாக விமானத்தை இயக்கி ஆறு மாதங்கள் ஆகியிருந்தது.

இவை மூன்றும் அமெரிக்காவில் நிகழ்ந்த சம்பவங்கள்.

பெருந்தொற்றின்போது உலகம் முழுவதும் உள்ள ஏறக்குறைய 100,000 விமானிகள் நீண்ட விடுப்பில் வைக்கப்பட்டனர் அல்லது மிகக் குறைவான விமானப் பயணங்களை மேற்கொண்டனர்.

அனைத்துலக விமானப் பயணங்கள் மீண்டும் அதிகமாகவுள்ள நிலையில் பலருக்குத் திறனும் தன்னம்பிக்கையும் குறைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஒரு நொடி ஏற்படும் மறதிகூட பேரிடருக்கு இட்டுச் செல்லலாம்.

சில விமான நிறுவனங்கள் தங்கள் விமானிகளுக்கு மறுபயிற்சி அளித்துள்ள வேளையில் வேறு சில நிறுவனங்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமானிகள் குறைபட்டுக் கொண்டனர்.

எனினும், விமானத் துறைத் தரநிலைகளை நிர்ணயிக்கும் அனைத்துலக பொது விமானத் துறை அமைப்பும் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கமும் சேர்ந்து விமான நிறுவனங்களுக்கான நீண்ட வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளன.

பல காலம் கழித்து விமானங்களைச் செலுத்தும் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வழிமுறைகளை அவை விளக்குகின்றன.

குறிப்புச் சொற்கள்