கோலாலம்பூர்: தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்து விடுவது பற்றி மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
அத்தகைய பயணிகள் கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் முகைதீன் யாசின் இதனை நேற்று தெரிவித்தார்.
இருநாடுகளுக்கு இடையே தடுப்பூசிச் சான்றிதழ்கள் அங்கீ கரிக்கப்படுவதன் பொருட்டு இந்த ஏற்பாடு பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார்.
"முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, அங்கீகரிக்கப்பட்ட மின்னிலக்கத் தடுப்பூசிச் சான்றிதழ் உடையோருக்கு எல்லைகள் திறந்துவிடப்படலாம்.
"புறப்பாட்டிற்கு முந்திய கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் தேவைப்படலாம். ஆனால், மலேசியா வந்திறங்கியதும் பயணிகள் கட்டாயமாக தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவது அல்லது அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய காலத்தைச் சுருக்குவது பற்றி நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்," என்றார் திரு முகைதீன்.
எல்லை திறப்பு பற்றி மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தலைமையிலான பணிக்குழு நேற்று விவாதித்ததாகவும் திரு முகைதீன் கூறினார்.
இவ்வேளையில் மலேசியாவில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கைரி ஐமாலுதீன் கூறினார். தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதமும் அதிகமாகி வருவது நல்ல அறிகுறி என்றார் அவர்.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் உதவி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.