சிட்னி: ஆஸ்திரேலியாவின் பரபரப்பான நகரமான சிட்னியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் நேற்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பினர்.
ஏறக்குறைய நான்கு மாதங் களாக அவர்கள் வீட்டிலேயே பள்ளிப் பாடங்களைப் பயின்று வந்தனர். தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதால் சிட்னி நகரம் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வரு கின்றன.
சிட்னியைத் தலைநகரமாகக் கொண்ட நியூ சவுத் வேல்சில் அலுவலகத்தில் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமில்லை. வீட்டிலும் வெளியிடங்களிலும் பெரிய குழுக்களாக ஒன்றுகூட முடியும். கடந்த வார இறுதியில் 16 வயதுக்கு மேற்பட்ட 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்பட்டது.
இந்த நிைலயில் தொற்றுக் கிருமியுடன் வாழும் உத்திக்கு அரசு மாறியுள்ளதால் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
இதனால் தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
"இதோடு முடிந்துவிடவில்லை. சுகாதார விதிமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், இதுவொரு நீண்ட பயணம்" என்று முதல்வர் டொமினிக் பெரோடெட் குறிப்பிட்டார். கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபானக் கூடங்கள் போன்ற இடங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் செல்ல முடியும். இரவுக் கேளிக்கை விடுதிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
திருமண விருந்தில் விருந்தினர்களுக்கான உச்ச வரம்பு விலக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கூடிய ஏராளமானோர் இதமான வெயிலை அனுபவித்தபடி நீராடி, நீர்ச்சறுக்கி, விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
ஆனால் எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

