பெய்ஜிங்: சீனாவில் நேற்று ஒன்பது உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து, இரண்டு நகரங்கள் முடக்கப்பட்டன.
சென்ற மாத இறுதிக்குப் பிறகு பதிவான ஆக அதிக உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் இவை.
இவற்றில் ஐந்து, ஷான்சி மாநிலத்தின் வடமேற்கு நகரமான சியானில் பதிவானவை. மேலும் இரண்டு சம்பவங்கள், மங்கோலிய எல்லையையொட்டிய நகரங்களிலும் பதிவானதாக அந்நாட்டின் சுகாதார ஆணையம் கூறுகிறது.
இதையடுத்து, விடுக்கப்பட்ட முடக்கநிலை உத்தரவால், மங்கோலிய எல்லையை ஒட்டியுள்ள உள் மங்கோலியாவில் 76,000 பேர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட உட்புற பொழுதுபோக்கு இடங்களும் மூடப்பட்டுள்ளன. சமய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன.
இந்நகரங்களில் கொவிட்-19 பரிசோதனை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீனாவின் பொருளாதாரம் கடுமையாக சரிவடைந்துள்ளது.
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3ஆம் காலாண்டில் வெறும் 4.9 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது.
இது இரண்டாம் காலாண்டின் 7.9 விழுக்காட்டைவிட 5 விழுக்காடு அதிகரிக்கும் என முன்னுரைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 3 விழுக்காடு குறைந்துள்ளது.
கொவிட்-19 தொற்றில் இருந்து மீண்ட சீனா, நிலக்கரி பற்றாக்குறையால் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.