அனைத்துலக பண நிதியத்தின் இவ்வாண்டுக்கான முன்னுரைப்பு
தோக்கியோ: ஆசியாவின் நடப்பாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று முன்னுரைத்துள்ளது அனைத்துலக பண நிதியம்.
அத்துடன், கொவிட்-19 நோய் தொற்றின் புதிய அலை, பொருள் விநியோக இடையூறுகள் மற்றும் பணவீக்க அழுத்தம் ஆகியவை மேலும் நிலைமையை மோசமாக்கக் கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
சீனாவின் பொருளியல் இவ்வாண்டு 8 விழுக்காடும் 2022ல் 5.6 விழுக்காடும் வளர்ச்சி காணும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் மீண்டும் மீண்டும் ஏற்படும் கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக, மீட்சி நிலைத்தன்மை யற்றதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக பண நிதியத்தின் வட்டார அறிக்கையில், ஆசியாவின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சியை 6.5 விழுக்காடாக குறைத்தது. இது சென்ற ஏப்ரல் மாதம் முன்னுரைக்கப்பட்டதைவிட 1.1 விழுக்காடு குறைவாகும்.
டெல்டா வகை கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக தொழிற்சாலை உற்பத்தி, நுகர்வோர் விகிதம் குறைந்ததால், பொருளியல் வளர்ச்சி குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2022ல் ஆசியாவின் பொருளியல் வளர்ச்சி 5.7 விழுக்காடாக இருக்கும் என்று கூறியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் கூறப்பட்ட 5.3 விழுக்காடு வளர்ச்சி என்பதைவிட சற்று அதிகமாகும்.
தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக பொருளியல் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளியல் இவ்வாண்டு 9.5 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் மேம்பட்ட பொருளியலைக் கொண்ட ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூ
சிலாந்து, தைவான் போன்ற நாடுகள் உயர்தொழில்நுட்பத்தால் பயனடைகின்றன என்று நிதியம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் கிருமிப் பரவல் காரணமாக 'கடுமையான சவால்களை' எதிர்கொள்வதாக நிதியம் சொன்னது.
எதிர்வரும் மாதங்களில் கிருமித் தொற்றின் புதிய அலைகள் பெரும் கவலையாக உள்ளதாகவும் அது சொன்னது.