சிட்னி: ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில மக்கள் விக்டோரியாவிற்குச் செல்வதற்கான பயணக் கட்டுப்
பாடுகள் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.
சிட்னி உள்ளிட்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் நகரங்களில் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளதால், அம்மாநில மக்கள் இனி தனிமைப்படுத்தல் இல்லாமல் விக்டோரியாவிற்குப் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களுக்கும் இடையில், கடந்த மூன்று மாத காலமாக நீடித்த இந்த பயணக் கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் மெல்பர்னில் இருந்து சிட்னி செல்ல விரும்புவோர், கண்டிப்பாக இரண்டு வார தனிமைப்
படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
விக்டோரியாவில் நேற்று 1,841 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இது முந்தைய நாள் எண்ணிக்கையான 1,749ஐவிட அதிகம்.
உலகளவில் நீண்ட நாள்களாக, அதாவது 262 நாள்களாக, முடக்கநிலையில் இருந்த விக்டோரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 70 விழுக்காட்டை எட்டியதால், இன்று இரவு முதல் அங்கு முடக்கநிலை தளர்த்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விகிதம் 80, 90 விழுக்காட்டை எட்டும்போது மேலும் அதிக தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிட்னியிலும் கான்பெராவிலும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால், அம்மாநிலங்களில் சென்ற வாரம் முடக்கநிலை தளர்த்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 149,000 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 1,577 பேர் மாண்டுவிட்டனர்.
ஆனால் அனைத்துலக அளவில் பார்க்கும்போது, ஆஸ்திரேலியாவில் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

