கெய்ரோ: வயிற்றில் ஏற்பட்ட கடுமையான தொற்றுக்காக நோயாளி ஒருவர்க்கு அறுவை சிகிச்சைபோது, அவரது வயிற்றினுள் கைபேசி இருந்ததைக் கண்டு எகிப்திய மருத்துவர்கள் வியப்படைந்தனர்.
அந்த ஆடவர் ஆறு மாதங்களுக்குமுன் அந்தக் கைபேசியை விழுங்கிவிட்டதாக நம்பப்படுகிறது என்று எகிப்திய ஊடகங்கள் கூறின.
கடும் வயிற்றுவலி காரணமாக அந்த ஆடவர், அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றார். அவரை ஊடுகதிர்ப் பரிசோதனைக்கும் வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தியதில், அவரது வயிற்றில் தீவிர தொற்று ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவுசெய்தனர். அறுவை சிகிச்சையின்போது கைபேசி அவர்களிடம் அகப்பட்டது.
இப்படி ஒரு நிகழ்வை எதிர்கொண்டது இதுவே முதன்முறை என்று அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.