புதுடெல்லி: முன்னாள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் துள்சி கப்பர்ட், பங்ளாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்துள்ளார். இந்த வன்முறைச் செயல்களால் குறைந்தது 11 இந்துக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் 800 பேர் காயமடைந்திருப்பதாக இந்தியாவின் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
"இத்தகைய வெறிச்செயலில் ஈடுபடுவோர், இறைவனைவிட்டு மிகவும் தொலைவில் இருப்பவர்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. அன்பே கடவுள், அன்புடையவர்களே அவரது உண்மையான தொண்டர்கள். சமய சிறுபான்மையரைக் காப்பாற்றும் பொறுப்பு பங்ளாதேஷிடம் உள்ளது," என திருவாட்டி கெப்பர்ட், காணொளி கொண்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்தார்.
துர்கா பூஜையில் இஸ்லாமிய புனித நூலான குர்ஆன் இந்துக் கடவுள்களின் சிலையின் காலடியில் வைக்கப்பட்டதாக வதந்திகள் கடந்த வாரம் பரவியதை அடுத்து இந்துக்கள் மீது சமய வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தலைநகர் டாக்காவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் குறைந்து 20 இந்துக்களின் வீடுகள் தீயிட்டுக் கொடுத்தப்பட்டன. 66 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.
வன்செயல்களுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்று பங்ளாதேஷ் அரசாங்கம் உறுதி அளித்தது. இதன் தொடர்பில் 450க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

