வாஷிங்டன்: ஆசிய நாடுகளில் சீனா தலையெடுத்து வருவதைக் கவனத்தில் கொண்டு, அதைச் சமாளிக்கும் வகையில் முக்கியமான ஆசிய நாடுகளில் அமெரிக்கத் தூதர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அதிபர் பைடன், சிலரைத் தேர்வுசெய்திருந்தார். அது நாடாளுமன்ற ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அந்த முக்கியமான நாடுகள் சிங்கப்பூர், சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை ஆகும்.
நீண்டகாலக் காத்திருப்புக்குப் பின் அதிபரின் முன்மொழிவை நாடாளுமன்ற மேலவைக் குழு, ஆய்வுசெய்யத் தொடங்கியுள்ளது. அதிபரின் முன்மொழிவை உறுதிசெய்யும் வகையில் முன்மொழியப்பட்டவர்களிடம் நேற்று முன்தினம் அக்குழு விசாரணை மேற்கொண்டது.
"இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள சிங்கப்பூருடனான பங்காளித்துவம் தவிர்க்கமுடியாதது," என்று அதிபர் பைடனால் சிங்கப்பூர் தூதர் பணிக்கு முன்மொழியப்பட்ட தொழில்நுட்பத் துறை தொழில்முனைவரான ஜோனாதன் கப்லன் கூறினார்.
"நான் சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராவது உறுதிசெய்யப்பட்டால், "இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்துவதோடு இரு நாடுகளும் பயனடையும் வகையிலான செயல்திட்டங்களை முன்னெடுப்பேன். அத்துடன் உலகில் பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் பொருளியலை, காலத்திற்கேற்ப நெருக்கடிச் சூழலைச் சமாளிக்க சிங்கப்பூருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றத் திட்டம் கொண்டுள்ளதாக திரு கப்லான், அமெரிக்க மேலவையின் வெளியுறவுக் குழுவிடம் தெரிவித்தார்.
"மேலும், நாடுகளுடனான பாதுகாப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கு இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வேன்.
"மேலும் இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதியைக் கட்டிக்காக்கும் வகையில் அனைத்துலக விதிகளைத் தற்காப்பேன்," என்றும் திரு கப்லான் மேலவைக் குழுவிடம் தெரிவித்தார்.
சீனாவுக்கான தூதராக முன்மொழியப்பட்டுள்ள நிக்கோலஸ் பர்ன்ஸ், ஜப்பானுக்கான தூதராக முன்மொழியப்பட்டுள்ள சிகாகோ நகரின் முன்னாள் மேயர் ராஹ்ம் இமானுவல் ஆகியோரிடமும் மேலவைக் குழு, விசாரணை மேற்கொண்டது.
சீனாவுடனான போட்டித்தன்மை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும், அதிபர் பைடன் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் பணி நிரப்பப்படாதது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.