நியூயார்க்: குறைந்த வருமான நாடுகளுக்குப் போதிய அளவில் தடுப்பூசி கிடைக்காததால் அடுத்த ஆண்டிலும் கொவிட்-19 பெருந்தொற்று நீடித்திருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற கண்டங்களில் 40% மக்கள் தடுப்பூசி போட்டுவிட்ட நிலையில், ஆப்பிரிக்காவில் இன்னும் ஐந்து விழுக்காட்டினர்க்குக்கூட தடுப்பூசி போடப்படவில்லை.
உலகளவிலான தடுப்பூசி எண்ணிக்கையில் 2.6% மட்டுமே ஆப்பிரிக்காவில் போடப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி கூறுகிறது.
இதனால், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசி வழங்குவதில் குறைந்த வருமான நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க ஏதுவாக, பணக்கார நாடுகள் வரிசையில் தங்களது நிலையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த தலைவரான டாக்டர் புரூஸ் ஐல்வர்ட் வலியுறுத்தியுள்ளார்.
மருந்து நிறுவனங்களும் பணக்கார நிறுவனங்களும் உறுதியளித்ததில் ஏழில் ஒரு தடுப்பூசி மட்டுமே ஏழை நாடுகளைச் சென்றடைந்துள்ளது என்று தடுப்பூசி நன்கொடைக்கான 'பீப்பல்ஸ் வேக்சின்' அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் நேற்றைய நிலவரப்படி கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு 8.5 மில்லியனை நெருங்குகிறது. இதனை அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் கூறியது.
கொரோனா தொற்றால் அங்கு இதுவரை 216,013 பேர் பலியாகி விட்டனர். 7,824,863 பேர் குணமாகியுள்ளனர் என்று அந்நிலையம் கூறியது.
தென்னாப்பிரிக்கா, மொரோக்கோ, துனீசியா, எத்தியோப்பியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகமான தொற்று பதிவாகியுள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென்னாப்பிரிக்காவில் மட்டும் 2,9017,255 பேரை கொரோனா தொற்றியுள்ளது. வடஆப்பிரிக்காவின் மொரோக்கோவில் 942,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவின் தென்பகுதியே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்நிலையம் தெரிவித்தது.
1.37 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஆப்பிரிக்காவில் இதுவரை 175 மில்லியன் பேருக்குத்தான் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
119 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை அந்நாடு விலைகொடுத்து வாங்கியுள்ளது.
111 மில்லியன் கோவேக்ஸ் திட்டத்தின் மூலமும் 31.2 மில்லியன் தடுப்பூசி நன்கொடை மூலமும் கிடைத்துள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் 100 பேருக்கு 4 பேர்தான் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.