லங்காவி: மலேசியாவின் லங்காவி சுற்றுலாத்தலத்திற்கு வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகள் வரும் 15ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று கொவிட்-19 சிறப்புக் குழு சந்திப்பிற்குப் பிறகு பேசிய மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
மலேசியாவின் சுகாதார அமைச்சு, வெளியுறவு அமைச்சு, குடிநுழைவுத் துறை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் குறைந்தது 80,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான காப்பீடு வைத்திருப்பதும் அவர்கள் லங்காவியில் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தங்கியிருக்க வேண்டியதும் அவசியம்.
கொவிட்-19 தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழோடு நேராக லங்காவிக்குச் செல்லும் பயணிகள் இரண்டாவது நாளில் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதும் பயண ஏற்பாட்டிற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் ஒன்று.
இந்த முன்னோடித் திட்டத்தை ஆராய்ந்த பிறகு, இது மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் இஸ்மாயில் சொன்னார்.