பால்டிமோர்: சீனா தாக்கினால், தைவானிற்கு நிச்சயமாக அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (படம்) தெரிவித்துள்ளார்.
தைவான்-சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் அதிபர் பைடன் இதனைக் கூறியுள்ளது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
"தைவானை பாதுகாப்பதற்கான பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. தைவானுடனான எங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. சீனா தைவானைத் தாக்கினால் நாங்கள் நிச்சயமாக தைவானிற்குப் பாதுகாப்பு அளிப்போம்," என்று சிஎன்என் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பைடன் சொன்னார்.
அப்போது, சீனாவின் ராணுவ, அரசியல் நெருக்கடி அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் தைவானின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா துணை நிற்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்தபோது அவர் இவ்வாறு சொன்னார்.
பைடன் இவ்வாறு கூறியதற்குப் பிறகு பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், "தைவானுடனான கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. உடன்படிக்கை கொள்கைக்கு உட்பட்டு எங்கள் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவோம். தைவானின் தற்காப்பிற்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்," என்றார்.
சட்டப்படி, தைவான் தன்னை தற்காத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வாஷிங்டன் வழங்க வேண்டும் என்றாலும், சீனா தாக்குதல் நடத்தினால், தைவானைப் பாதுகாக்க ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடுமா என்ற தெளிவற்ற நிலை நீண்ட காலமாக உள்ளது.
பைடனின் கூற்றுக்குப் பிறகு பேசிய சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், தைவானின் சுதந்திரத்தை விரும்புபவர்களுக்குத் தவறான குறிப்புகளை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவை வலிறுத்தியுள்ளார்.
சீனாவின் நலன் என்று வரும்போது எந்தச் சலுகைகளுக்கும் இடமில்லை என்றும் அவர் சொன்
னார்.