இந்திய மக்களின் ஆயுட்காலத்தைக் குறைத்தது கொவிட்-19

இந்திய மக்களின் ஆயுட்காலத்தைக் குறைத்தது கொவிட்-19

1 mins read
813a480d-e617-4716-b32a-a5c536b5febf
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் நிற்கும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

மும்பை: கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் இந்தியாவில் மக்களின் ஆயுட்காலம் ஏறக்குறைய ஈராண்டுகள் குறைந்திருக்கிறது. மக்கள்தொகை ஆய்வுக்கான அனைத்துலகக் கழகத்தை (ஐஐபிஎஸ்) சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய புள்ளிவிவர பகுப்பாய்வில் இது தெரியவந்துள்ளது.

"2019ல் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் முறையே 69.5 மற்றும் 72 ஆண்டுகளாக இருந்தது. 2020ல் இது 67.5 மற்றும் 69.8 ஆண்டுகளாகக் குறைந்தது," என்று ஐஐபிஎஸ் உதவிப் பேராசிரியர் சூர்யகாந்த் யாதவ் கூறினார்.

ஒப்புநோக்க, அமெரிக்கா, இங்லிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் ஆயுட்காலம் ஓராண்டுக்குமேல் குறைந்திருப்பதாகவும் ஸ்பெயினில் அது 2.28 ஆண்டுகள் குறைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்திய சுகாதார அமைச்சைப் பொற்றுத்தவரை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொவிட்-19 காரணமாக இந்தியாவில் ஏறக்குறைய 450,000 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆனால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கும் என புள்ளிவிவர நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் தற்போது மனிதரின் ஆயுட்காலம், 2010ல் இருந்த நிலைக்குச் சமமாக உள்ளது.

ஆயுட்காலத்தில் ஈராண்டுகள் குறைந்திருப்பது சிறிய விஷயம் அல்ல என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத நிபுணர் ஒருவர்.

குறிப்புச் சொற்கள்