வெலிங்டன்: நியூசிலாந்தில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 104 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் நாட்டின் தென்தீவைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு நியூசிலாந்தின் தென்தீவில் சமூக அளவில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
நியூசிலாந்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் ஆக்லாந்து நகரைச் சேர்ந்தவர்கள். அந்நகரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கநிலை அமல்படுத்தப்
பட்டுள்ளது. நியூசிலாந்தின் மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தபோதிலும் அவை ஆக்லாந்தில் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப்போல் கடுமையானதல்ல. தென்தீவில் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளபோதிலும் அவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவும் சாத்தியம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர். பாதிக்கப்பட்டவர் குணமடையும் நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவருடன் சிலர்தான் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் அவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்தின் சுகாதார அமைச்சு கூறியது.
மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கடுமையான முடக்கநிலை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று நியூசிலாந்துப் பிரதமர் ஜெசின்டா ஆர்டர்ன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி
போட்டுக்கொண்டுள்ளனர்.