யங்கோன்: ஆசியானில் அமைதியை நிலைநாட்டுவதற்கு வரையப்பட்ட திட்டத்திற்குத் தன்னால் முடிந்தவரை இணங்கப்போவதாக மியன்மாரின் ராணுவ அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. திட்டத்திற்கு இணங்காததால் சென்ற வாரம் நடைபெற்ற மாநாடு ஒன்றுக்கு மியன்மாரின் தலைமை தளபதி அழைக்கப்படாதபோது அந்நாட்டு அரசாங்கம் இவ்வாறு கூறியுள்ளது.
பிற நாடுகளுடன் பகையை வளர்த்துக்கொள்ளாமல் அமைதியாக இருக்கும் கொள்கையைத் தான் நிலைநாட்டுவதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட அமைதித் திட்டத்தின் ஐந்து அம்சங்களைக் கடைப்பிடிப்பதில் ஆசியானுடன் ஒத்துழைக்கப்போவதாகவும் மியன்மாரின் ராணுவ அரசாங்கம் அறிவித்தது.
அத்திட்டத்தை மியன்மார் செயல்படுத்தாததால் மாநாட்டில் மியன்மார் தலைவர் ஜெனரல் மின் ஆவுங் ஹ்லாய்ங்கைச் சேர்த்துக்கொள்ளவேண்டாம் என்று ஆசியான் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இம்மாதம் 15ஆம் தேதியன்று முடிவுசெய்தனர். பேச்சுவார்த்தையைத் தொடங்க முயற்சி செய்வது, மனிதாபிமான உதவிக்கு வகைசெய்வது உள்ளிட்ட அம்சங்கள் திட்டத்தில் அடங்கும். கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதியன்று மியன்மாரின் ராணுவம் அந்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது.

