கேன்பெரா: ஆஸ்திரேலியா 2050ஆம் ஆண்டுக்குள் அதன் கரியமில வாயு வெளியீட்டை முற்றிலும் துடைத்தொழிக்க இலக்கு கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும், குறுகியகாலத்திற்குரிய உறுதியான இலக்குகளுக்கு திட்டம் வகுக்க ஆஸ்திரேலியா தன் கடப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்ற பருவநிலை ஆர்வலர்கள் கோரிக்கைக்கு இடமளிக்கத் தவறியுள்ளது.
இலக்கு தொடர்பான நாட்கள் குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று தெரிவித்தார். எரிசக்தி பயனீட்டாளர்களும் நிறுவனங்களும் கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு, கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்கும் வழிவகைகளைக் கையாள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கிளாஸ்கோவில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை உலகநாடுகள் பங்கேற்கவிருக்கும் பருவநிலை மாநாடு நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு, கரிம வெளியீடு அற்ற நிலையை உருவாக்குவது குறித்த இலக்கை எட்டுவதற்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இணைய ஆஸ்திரேலியா மறுப்புத் தெரிவித்திருந்தது. அதனையடுத்து அந்நாடுகளின் விமர்சனத்திற்கு அது ஆளானது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா 2050ஆம் ஆண்டுக்குள் கரிமவெளியீட்டை முற்றிலும் துடைத்தொழிக்க இலக்கு கொண்டுள்ளதாக அறிவித்திருப்பது ஆஸ்திரேலியா மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரேலியாவின் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறார் மோரிசன். இந்நிலையில், அங்கு கரிம வெளியீட்டைக் குறைக்கும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலம், அங்குள்ள நிறுவனங்கள், வேலைகள் இவற்றுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அவர் கருதுவதாகக் கூறப்படுகிறது. அதிகளவு பசுமை இல்ல வாயுக்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. நிலக்கரி சார்ந்த பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா உள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் கரிம வெளியீட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் A$20 பில்லியன் முதலீடு செய்துள்ளது.
எனவே, 2050க்குள் கரிம வெளியீடற்ற நிலையை உருவாக்கும் இலக்கு கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா 2030ஆம் ஆண்டுக்குள் 30 முதல் 35 விழுக்காடு கரிம வெளியீட்டைக் குறைத்துவிடும் என்று பிரதமர் மோரிசன் கூறினார்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் வடக்கே டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சேர்ந்த மக்கள், அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். தங்கள் வீடுகளைப் பருவநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.