வாஷிங்டன்: ஓராண்டுக்கு முன் மாண்ட தங்களின் தம்பியின் சடலத்துடன் மூன்று சகோதரர்கள், ஹூஸ்டன் வீடு ஒன்றில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எட்டு வயதாக இருந்தபோது சிறுவனை அவன் தாயாரின் காதலன் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
சிறார்கள் பல மாதங்களாக தங்களின் அண்டைவீட்டாரிடமிருந்து உணவு பெற்றுவந்ததாகவும் கூறப்பட்டது.
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பிள்ளைகள், துயர நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தியாளர் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.
சகோதரர்களில் ஆக மூத்தவரான 15 வயது சிறுவன், தம்முடைய 10 மற்றும் 7 வயது சகோதரர்களைப் பார்த்துக்கொள்ள முயற்சி செய்தபோதும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள நிலையில் பிள்ளைகள் இருந்ததாகவும் துன்புறுத்தலுக்கு ஆளான அறிகுறிகள் அவர்களின் உடலில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இதன் தொடர்பில் பிள்ளைகளின் தாயாரான 35 வயது குலோரியா வில்லியம்ஸ், தாயாரின் காதலனான 31 வயது பிரையன் குல்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உயிருடன் மீட்கப்பட்ட மூன்று சிறார்களும் தற்போது குடும்ப, பாதுகாப்புச் சேவைகள் பிரிவில் உள்ளனர்.