டென்பசார்: இந்தோனீசியாவின் முதல் அதிபரான சுகர்னோவின் மகளான சுக்மாவதி சுகர்னோபுத்ரி, இஸ்லாமிய சமயத்திலிருந்து இந்து சமயத்திற்கு அதிகாரபூர்வமாக நேற்று முன்தினம் மாறியதாக சிஎன்என் இந்தோனீசியா தெரிவித்தது. சமயம் மாறுவதற்கான சடங்குகள் திங்கட்கிழமையன்று தொடங்கி, நேற்று முன்தினம் முடிவுற்றது. சுக்மாவதியின் 70வது பிறந்தநாளுடனும் சடங்கு விழாவும் சேர்ந்து நடந்து உள்ளதாகக் கூறப்பட்டது.
'சுதி வதனி' என்ற சடங்கை சுக்மாவதி பூர்த்தி செய்தது, அவர் இந்து சமயத்திற்கு அதிகாரபூர்வமாக மாறிவிட்டதைக் குறிக்கும். சமயம் மாறும் சடங்குக்கு முன்னதாக சுக்மாவதி தம்முடைய சகோதரி மேகாவதியிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது.
பாலியைச் சேர்ந்த தம்முடைய பாட்டியால் இந்து சமயத்திற்கு மாறும் முடிவை சுக்மாவதி எடுத்தார். சகோதரர்களும் பிள்ளைகளும் இவரது முடிவை ஏற்றுக்கொண்டு ஆதரவும் தந்துள்ளதாக அறியப்படுகிறது.

