லாகூர்: பரபரப்பான சாலையில் கார்களும் மோட்டார்சைக்கிள்களும் விரைந்தபடி இருக்க, நடுவே இரு நெருப்புக்கோழிகளும் ஓடியதைக் கண்டு வாகனமோட்டிகள் வியப்புற்றனர்.
அண்மையில் பாகிஸ்தானின் லாகூர் நகரின் கெனால் சாலையில் இந்த அரிய நிகழ்வு இடம்பெற்றது.
நெருப்புக்கோழிகளைக் கண்ட பலரும் தங்களது வாகனங்களில் இருந்தபடி கைபேசி மூலம் அவற்றைப் படம்பிடித்தனர். ஒருசிலர் அவற்றை விரட்டிப் பிடிக்கவும் முயன்றனர்.
லாகூரின் புறநகர்ப் பகுதியில் இருந்து தப்பி, அவை இரண்டும் நகருக்குள் வந்துவிட்டதாக 'டெய்லி பாகிஸ்தான்' செய்தி கூறியது.
இந்த நிகழ்வு, சமூக ஊடகவாசிகள் சிலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு சிலர், அப்பறவைகள் இரண்டும் அஞ்சி ஓடுவதாகக் குறிப்பிட்டு, அவற்றின் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்திருந்தனர்.
அவ்விரு நெருப்புக்கோழிகளில் ஒன்று இறந்துவிட்டதாக 'ஏஆர்ஒய்' ஊடகச் செய்தி தெரிவிக்கிறது,
ஆடவர் ஒருவர், நெருப்புக்கோழி ஒன்றைக் கழுத்தைச் சேர்த்துப் பிடிக்க முயன்றதாகவும் அப்போது அவர் காற்றுக்குழலை இறுக்கியதால் அது மூச்சுத்திணறி இறந்துவிட்டதாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.
பின்னர் அந்த நெருப்புக்கோழி சாலையில் இருந்து அகற்றப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கியுள்ளது.

