மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் தனித்திருக்கும் கட்டுப்பாடற்ற பயணம் இன்று (நவம்பர் 1) முதல் தொடங்கும் என ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட அனைத்துலக எல்லைகளை பகுதி பகுதியாகத் திறக்க ஆஸ்திரேலியா தயாராகி வருவதாகவும் அதன் தொடக்கமாக கட்டுப்பாடு விலக்கப்பட்ட பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் நேற்று அவர் கூறினார்.
நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தலைநகர் கேன்பராவில் வசிக்கும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய குடிமக்களும் நிரந்தரவாசிகளும் இன்று முதல் அனைத்துலக அளவிலான பயணம் மேற்கொள்ளலாம். அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பி வரும்போது தனித்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
மேலும், அண்டைய நியூசிலாந்து மக்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள்.
"பொருளியல் மீட்சியை நோக்கிய எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இது," என சுற்றுப்பயணத் துறை அமைச்சர் டேன் டெஹான் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

