மெல்ல மெல்ல அதிகரிக்கும் கிருமிப் பரவல்; சீனா கடும் நடவடிக்கை
பெய்ஜிங்: சீனாவில் மூன்று மாதங்களில் ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று சீனாவில் 93 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆக அதிகமான எண்ணிக்கை இது.
பெய்ஜிங்கில் ஜனவரி 19ஆம் தேதிக்குப் பிறகு நேற்று ஆக அதிகமாக எட்டு பேர் தொற்றுக்கு ஆளாகினர்.
சென்ற மாத பிற்பகுதியில் இருந்து சீனாவில் ஒவ்வொரு நாளும் கிருமிப் பரவல் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும் கிருமித்தொற்றை முற்றிலும் ஒழிக்கும் கொள்கையைக் கொண்டிருக்கும் சீனா, கிருமிப் பரவலைக் கட்டுப்
படுத்த மிகக் கடுமையான நட
வடிக்கைகளை எடுத்து வருகி
றது.
அந்த வகையில், பள்ளி ஊழியர் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தொடக்கநிலை மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குள்ளேயே பூட்டப் பட்டதாக பிபிசி செய்தி கூறுகி
றது.
உடனடியாக அவர்களுக்குக் கிருமித்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவு வரும் வரை வீட்டிற்கு அனுப்பப்படாத 7 முதல் 12 வயதுக்கு உட்பட்ட அந்த மாணவர்கள், அன்றிரவைப் பள்ளிக் கூடத்திலேயே கழித்தனர்.
பள்ளிக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த பெற்றோர்களிடம் குறிப்பிட்ட சில மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருப்பதாக பள்ளி தலைமையாசிரியர் சொன்னார்.
கிட்டத்தட்ட 35 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று உள்ளூர் தொலைக்காட்சி தெரிவித்தது.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஷாங்காயில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதால், டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்காவிற்குச் சென்ற அனைவரும் அங்கேயே பூட்டப்பட்டனர்.
பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகுதான் அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.