ரோம்: உலகில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு அமைப்பு கூறியுள்ளது. 43 நாடுகளில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42லிருந்து 45 மில்லியனாக உயர்ந்திருப்பதாக அமைப்பு தெரிவித்தது.
குறிப்பாக ஆப்கானிஸ்தானில் மேலும் மூன்று மில்லியன் பேர் உணவுப் பஞ்சத்திற்கு ஆளாகிஇருப்பதாகத் தெரியவந்தது. அதுவே பஞ்சத்தால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பூசல்கள், பருவநிலை மாற்றம், கொவிட்-19 ஆகியவை உணவுப் பஞ்சத்தால் தவிப்போரின் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பதாக 'டபள்யூஎஃப்பி' எனப்படும் உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி குறிப்பிட்டார். இதனால் 45 மில்லியனுக்கும் அதிகமானோர் உணவின்றி இருக்கும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை ஆக அண்மையில் வெளிவந்துள்ள தகவல்கள் காட்டுவதாக அவர் சொன்னார்.
உலகில் உணவுப் பஞ்சத்தைப் போக்க சுமார் ஏழு பில்லியன் டாலரைச் செலவிடவேண்டியிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு தொடக்கத்தில் இத்தொகை 6.6 பில்லியன் டாலராகக் கணிக்கப்பட்டிருந்தது. மேலும், உணவுப் பஞ்சத்தைப் போக்க நடப்பில் இருக்கும் நிதி வழங்கும் முறைகள் சமாளிக்கமுடியாத சவால்களை எதிர்நோக்குவதாகவும் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
மோசமான உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்கப் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்துவைப்பது, அவர்களின் பள்ளிக் கல்வியை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சில குடும்பங்களில் பெற்றோர் எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா, ஹெய்ட்டி, சோமாலியா, அங்கோலா, கென்யா, புரூண்டி ஆகிய நாடுகளிலும் பெரும் பசிக்கு ஆளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக இத்தாலியின் தலைநகர் ரோமில் இயங்கும் ஐக்கிய நாட்டு நிறுவன உணவு அமைப்பு கூறியது.