வெலிங்டன்: தடையற்ற வர்த்தகம், திறந்த பொருளாதாரம் ஆகியவை வட்டாரத்தை கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் என்று ஏபெக் எனும் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் சந்திப்பில் கலந்துகொண்ட வர்த்தக, வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள ஏபெக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஸின்பிங் உட்பட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கு முன்னதாக அமைச்சர்களுக்கு இடை
யிலான மெய்நிகர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இச்சந்திப்பை வழிநடத்திய நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டேமியன், புதைவள எரிபொருளுக்கு வழங்கப்படும் மானியங்களை நாடுகள் தானாக முன்வந்து குறைப்பது, தடுப்பூசிகள், பிற தொற்று நோய்க்கான மருத்துவ பொருட்கள் மீதான வரிகளை நீக்குவதற்கான கடப்பாடுகள் குறித்து பேசப்பட்டதாக சொன்னார்.
தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களைக் களைவதற்கு வர்த்தக தடைகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் பற்றி அனைவரும் உடன்பாடு கண்டுள்ளதாகவும் அவர் சொன்னார். தலைவர்கள் சந்திக்கும்போது, எல்லைகளைத் திறப்பது பற்றியும் பேசப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏபெக்கின் உறுப்பிய நாடுகள், உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டை கொண்டுள்ளது. உலகில் அந்நாடுகளின் பொருளாதாரம் 60 விழுக்காடாக உள்ளது.

