கோலாலம்பூர்: அதிகமானோர் இதய நோய், உடற்பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால் மலேசியா ஆரோக்கியமற்ற நாடாக கருதப்படுவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.
மலேசியர்களிடையே ஆரோக்கியம் குறித்த விழப்புணர்வு குறைவாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "உடல் பருமன், இதய நோய் போன்றவற்றில் முதலிடத்தில் இருக்கும் நாடுகளில் நாமும் ஒன்று. அத்துடன் கொவிட்-19 உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான, நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம்.
"மலேசியாவில், நான் உட்பட, இரண்டில் ஒருவர் உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார். நால்வரில் ஒருவர் உடல் ரீதியிலான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. 20 பேரில் ஒருவர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.
"அரை மில்லியன் பேர் மனஅழுத்தத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன," என்றார்.
பழக்கவழக்கத்தில் மாற்றம், சுகாதார பரிசோதனை செய்து கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே 'ஆரோக்கிய மலேசியா' திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19 நோயை நிரந்தர நோயாக கையாளுவதற்கு மலேசியர்களுக்கு உதவும் வகையில் 'ஆரோக்கிய மலேசியா' திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.