சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கொவிட்-19 தொற்றுக் குழுமம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தக் குழுமம் தொடர்புடைய கிருமித்தொற்று அதிவேகமாகப் பரவி பலரைத் தொற்றி வருகிறது.
பெய்ஜிங்கின் கொள்ளை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் தொற்றின் தடமறிதலிலும் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகிறது.
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுப்பது குறித்து, கொள்ளைநோய்க் கட்டுப்பாட்டு நிலையம் நேற்று அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டியது. அந்தக் கூட்டத்தில், படுவேகத்தில் பரவிவரும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நுணுக்கமான அதே வேளையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனையடுத்து பெய்ஜிங், கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, தொற்றுச்சோதனையை முடுக்கிவிட்டுள்ளதோடு கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.
பெய்ஜிங்கில் இதற்கு முன் ஒருமுறை கிருமிப்பரவல் அதிகரித்தது. அது மங்கோலியாவுக்குச் சென்று வந்த ஒரு சுற்றுலாப் பயணக் குழுவினருடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள கிருமிப்பரவல், பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு மாநாட்டுடன் தொடர்பு படுத்தப்படுகிறது.
நேற்று முன்தினம், சமூகத்தில் ஆறு பேரை கிருமி தொற்றியது. அவர்களில் பெரும்பாலோர் 'பெட்ரோசைனா கோ' என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் என்று கொள்ளை நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தின் துணை இயக்குநர் பாங் ஸிங்ஹுவோ நேற்று கூறினார்.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த அக்டோபர் 28 முதல் நவம்பர் 10ஆம் தேதி, பெய்ஜிங்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டனர். அவர்களில் ஜிலின் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிருமி தொற்றியது மறுநாள் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து ஜிலின் மாகாணத்தில் பெரிய அளவிலான கொவிட்-19 சோதனையை முடுக்கிவிட்டதாக பெய்ஜிங் நகராட்சி மன்றப் பேச்சாளர் திரு ஸு ஜெஜியன், நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மாநாட்டுக்குச் சென்று வந்த ஹைடியன் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதையடுத்து அவ்விரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் இடங்களில் பெரிய அளவிலான சோதனையை முடுக்கிவிட்டுள்ளதாக திரு ஸு, தெரிவித்தார்.
இதனையடுத்து பெட்ரோசைனா நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களிலும் சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. நேற்று நண்பகல் வரையில் நடந்த சோதனையில் யாருக்கும் தொற்றுப் பாதிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தையடுத்து பெய்ஜிங் நகரில் நடைபெறும் மாநாடுகள், கூட்டங்கள் யாவும் மெய்நிகர் வாயிலாகவே நடத்தப்பட வேண்டும் என்று பெய்ஜிங் நகரமன்றம் அறிவித்துள்ளது.
சீனாவின் டாலியன் துறைமுகப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றுக்குழுமம் தொடர்புடைய கிருமி அதிகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தின நிலவரப்படி 52 சமூகத் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பெரிய அளவில் தொடங்கப்பட்டுள்ள கொவிட்-19 சோதனை நடவடிக்கையில் ஏராளமான தொண்டூழியர்கள் உதவி வருகின்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் இந்த சோதனை நடவடிக்கைக்கு ஆதரவு கொடுப்பதாக கூறப்படுகிறது.

