பெய்ஜிங்: தைவானின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் முயற்சிகளை எடுப்போருக்கு ஆதரவு தரவேண்டாம் என்று சீனா, அமெரிக்காவை எச்சரித்துள்ளது. "தைவான் நீரிணையில் அமெரிக்கா உண்மையிலேயே அமைதி காக்க எண்ணினால், அது தைவானின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை திட்டவட்டமாக எதிர்க்கவேண்டும்," எனச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனிடம் கூறினார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றநிலை அதிகரித்து வந்துள்ளது. சுமார் ஓராண்டாக சீனாவின் ஆகாயப்படை தனது எல்லைக்கு அருகே பயிற்சிகளை நடத்திவருவதாக தைவான் குறைகூறிவருவது இதற்குக் காரணம்.
தைவான், சொந்த அரசாங்கத்துடன் இயங்கும் தீவு. அது சீனாவுக்குச் சொந்தமான பகுதி என்பது பெய்ஜிங்கின் வாதம். தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் அதனுடன் தனது நாடு கூட்டு சேராமல் இருப்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று என ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியிருந்தார்.
எரிசக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் திரு வாங்கும் திரு பிளிங்கனும் தங்களின் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். வரும் திங்கட்கிழமையன்று இரு நாட்டு அதிபர்களான ஜோ பைடனும் சீ ஜின்பிங்கும் மெய்நிகராகச் சந்திக்கவிருக்கின்றனர். அது குறித்தும் இருவரும் பேசினர்.
இதற்கிடையே, தனது நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறு தீவுகள் உட்பட தன்னைப் பாதுகாக்க அமெரிக்கா காண்பித்துவரும் அக்கறையில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் திரு பிளிங்கன் தொலைபேசிவழி தனக்கு உறுதியளித்ததாக ஜப்பானின் புதிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி கூறியுள்ளார். தெற்குச் சீனக் கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய அத்தீவுகளின் தொடர்பில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு கசப்படைந்துள்ளது.

