மலாக்கா: மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் ஜாம்பவான்களைக் கொண்ட இரு தரப்புகளும் தங்களின் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் தொடர்பான ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மாநில மக்களை வெவ்வேறு நிகழ்வுகள் மூலம் கட்சித் தலைவர்கள் துடிப்புடன் சந்தித்து வருகின்றனர்.
அரசியல் பிரசாரங்கள், நடைப் பயணங்கள், பொதுமக்களுக்கு நேரடியாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த சாபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு மீண்டும் ஏற்படாததைத் தடுக்க மலாக்கா தேர்தலுக்கு இந்நடைமுறைகள் அறிவிக்கப்பட்டன.
போலிஸ் அனுமதியுடன் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்களிலிருந்து ஒலிபெருக்கி வழி பிரசாரம் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மலாக்காவுக்கு அரசியல் தலைவர்கள் படையெடுத்துச் செல்வதை இத்தடைகள் தவிர்க்கவில்லை.
முன்னாள் பிரதமர்கள் நஜிப் ரசாக் மற்றும் முகைதீன் யாசின், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆகியோர் மலாக்கா மக்களைச் சந்திப்பதற்காக மாநிலத்தை வலம் வருவதாகக் கூறப்பட்டது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர்கள் என்ற நிலையில் நஜிப், திரு முகைதீன் இருவரின் பிரசாரத்தையும் அரசியல் கவனிப்பாளர்கள் அணுக்கமாகக் கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மலாக்காவில் கலந்துகொண்ட நிகழ்வு தொடர்பில், ஏற்பாட்டாளருக்கு 20,000 ரிங்கிட் (S$6,500) அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு நிலையம் ஒன்றில் கூடியவர்களிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்த தவறியதால், ஏற்பாட்டாளரான பாரிசான் நேஷனல் கூட்டணியின் வாக்களிப்பு நிலையத் தலைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உணவு நிலையத்தில் திரு இஸ்மாயிலை வரவேற்க 60 ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

