மெல்பர்ன்: கொவிட்-19க்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. இந்நிலையில், ஜனவரியில் 12 வயதுக்கும் குறைந்த சிறாருக்குத் தடுப்பூசி போடுவது தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசியை 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்குப் போடுவது குறித்த சுகாதார, பாதுகாப்புத் தரவுகளை மருத்துவ அதிகாரிகள் மறுஆய்வு செய்து வருவதாக சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் கூறினார். இதனால் இப்பிரிவினருக்குத் தடுப்பூசி போடுவது தொடர்பில் இவ்வாண்டில் முடிவெடுப்பது சற்று சிரமமே என்றார்.
"12 வயதுக்கும் குறைந்த சிறாருக்குத் தடுப்பூசி போடுவதை ஜனவரி முற்பாதியில் எதிர்பார்க்கலாம். இருப்பினும், இது தொடர்பில் துரிதமாகச் செயல்பட்டு வருகிறார்கள்," என்று திரு ஹன்ட் குறிப்பிட்டார். 'ஃபைசர்-பயோஎன்டெக்' தடுப்பூசியை 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்குப் போடலாம் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் இம்மாதம் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், கைக்குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தேவையான அளவு தடுப்பூசிகளையும் பூஸ்ட்டர் தடுப்பூசிகளையும் ஆஸ்திரேலியா கையகப்படுத்திவிட்டதாக அந்நாட்டு கொவிட்-19 பணிக்குழுவின் தலைவர் ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் ஜான் ஃபிருவன் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் 16 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ள விகிதம், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 90 விழுக்காட்டில் பதிவானது. 83 விழுக்காட்டினருக்கு இரு தடுப்பூசிகளும் போடப்பட்டுவிட்டன. 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறாரில் 57.7 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

