ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சில தினங்களுக்கு முன்பு மகாத்மா காந்தியின் சிலை திறந்துவைக்கப்பட்டது. அது திறந்துவைக்கப்பட்ட சில மணி நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
மெல்பர்னின் ரோவில் எனும் பகுதியில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய இந்தியச் சமூக நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காந்தி சிலை திறந்துவைக்கப்பட்டது.
வெண்கலத்தில் செய்யப்பட்ட இந்தச் சிலையின் எடை 426 கிலோகிராம். இந்திய அரசு அன்பளிப்பாக வழங்கிய இந்தச் சிலை, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டது.
காந்தி சிலையின் கழுத்தை துண்டிக்க சிலர் முற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதை வெட்டுவது எளிதல்ல என்பதால் அவர்களின் முயற்சி கைகூடவில்லை என்றாலும், சிலையின் கழுத்தில் ஐந்து அல்லது ஆறு சென்டிமீட்டர் அளவு வெட்டு ஏற்பட்டுள்ளது.
போலிஸ் விசாரணை தொடர்கிறது.