பெர்லின்: ஜெர்மனியில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் விகிதம் ஆக அதிகமாக உயர்ந்து வருகிறது.
எனவே கடுமையான கட்டுப் பாடுகளைக் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
கடைசி ஏழு நாளில் ஒவ்வொரு 100,000 பேரில் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 303ஆக உள்ளது. முந்திய நாள் இது 289ஆக இருந்தது.
கிருமிப் பரவல் தொடங்கியதில் இருந்து பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும் இது.
திங்கட்கிழமை நிலவரப்படி, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் விகிதம் 100,000 பேருக்கு 4.65ஆக உள்ளது. ஒரு சில பகுதிகளில் நோயாளிகளைக் கையாள முடியாமல் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் திணறுகின்றன.
அதே நேரத்தில் கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் பல மருத்துவமனைகள் ஊழியர்களை அப்பிரிவுகளுக்கு அனுமதிக்கின்றன.
சில மருத்துவமனைகளில் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படுகின்றன.
ஜெர்மன் மருத்துவ சங்கத்தின் தலைவர் ஃபிராங்க் உல்ரிச் மாண்ட்கோமெரி மோசமடைந்து வரும் இச்சூழ்நிலையில், நவம்பர் 25ஆம் தேதியோடு முடிவடைவுள்ள கொவிட்-19 அவசரநிலையை நீட்டிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் தடுப்பூசி போடாதவர்கள், அதைப் போட்டுக்கொள்வதற்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ள மூன்று கட்சிகளும் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கத் திட்டமிட்டு வருவதாக கிரின் கட்சியின் இணைத் தலைவர் ராபர்ட் ஹேபேக் சொன்னார்.
ஜெர்மன் பிரதமர் மெர்கலும் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்துப் பரிசீலித்து வருவதாக சொன்னார்.
இவை வரும் வியாழக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
சமூகத் தொடர்புகளில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
மூன்று மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் முடக்கநிலை, பள்ளி களை மூடுவது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனிடையே, மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையை அடுத்து, இலவச கொவிட்-19 பரிசோதனைத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

