யங்கூன்: மியன்மாரில் கிருமித்தொற்று சம்பவங்களும் உள்நாட்டு பிரச்சினைகளும் குறைந்துள்ளதால், அனைத்துலக எல்லையைத் திறக்கவுள்ளதாக ராணுவ ஆட்சிக் குழு அறிவித்துள்ளது.
சீனா, மற்றும் பல நாடுகளின் தடுப்பூசி நன்கொடையால், தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மியன்மார் கூறியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் அண்டை
நாடுகளான சீனா, தாய்லாந்துடன் நில எல்லையைத் திறக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கான எல்லையைத் திறக்கவுள்ளதாகவும் ராணுவ ஆட்சியின் நிர்வாக மன்றம் கூறியது.
இது நாட்டின் பொருளியலை மீட்கவும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் உதவும் என்று கருதப்
படுகிறது.
ஆனால், மியன்மாரில் போட்டி அரசாங்கம் நடத்தும் தேசிய ஒற்றுமை அரசு 'வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகள் யாரும் வராதீர்கள்' என்று கூறியுள்ளது.
'மியன்மாரில் மக்கள் கொல்லப்படுகிறார்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், மக்களின் வீடுகள் சேதப்படுத்தப்படுகின்றன. இது வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா வருவதற்கான நேரம் அல்ல," என்று போட்டி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கூறினார்.
இதற்கிடையே, தேர்தலில் முறைகேடு செய்ததாக மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி மீது மியன்மார் ராணுவ ஆட்சிக்குழு நேற்று குற்றம் சாட்டியது. அவருடன் முன்னாள் அதிபர் வின் மியண்ட் உட்பட 15 அதிகாரிகள் மீதும் இதே குற்றம்சாட்டப்பட்டது.
தேர்தல் முடிவுகள் செல்லாது என்று கூறி சென்ற பிப்ரவரி மாதத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், சூச்சியை காவலில் வைத் தது.

