பிரிஸ்பேன்: கத்தாரின் டோஹா விமான நிலையத்தில் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு ஆடைகளை அகற்றி, ஊடுருவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவர், தமக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் இன்று புதன்கிழமை (நவம்பர் 17) பேசினார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆகிவிட்டாலும், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கான அச்சம் தம்மைவிட்டு இன்னமும் போகவில்லை என்று அவர் வேதனையுடன் கூறினார்.
டோஹா விமான நிலையத்தில் உள்ள ஒரு கழிவறையில் குழுந்தை ஒன்று கைவிடப்பட்டதைக் கண்டறிந்த அதிகாரிகள், அதன் தாயாரைக் கண்டுபிடிக்க முற்பட்டனர். ஆனால், அவர்கள் எடுத்த முயற்சி பின்னடைவைச் சந்தித்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அன்றைய இரவு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் செல்லவிருந்த விமானத்தில் இருந்த பெண் பயணிகள் சிலரிடம் விளக்கம் எதுவும் தராமல், விமான நிலையத்தில் உள்ள தனியிடத்திற்கு அவர்களை அதிகாரிகள் அழைத்துச் சென்று தீவிர சோதனை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண்களில் எழுவர், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் கத்தார் அதிகாரிகளுக்கும் எதிராக இப்போது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுந்தது.
அந்தப் பெண்களில் ஒருவரான 50 வயது மதிக்கத்தக்க பிரெஞ்சு நாட்டவர், “இந்தச் சம்பவம் பற்றி நான் யோசிக்காத நாளே இல்லை,” என்று கூறினார்.
டோஹாவில் இருந்து பறக்கவிருந்த 10 கத்தார் ஏர்வேஸ் விமானங்களில் இருந்த பெண்கள் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் பிரான்ஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்களாவர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து கத்தார் அதிகாரிகள் மன்னிப்பு கோரினர். இதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, விமான நிலைய ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
இந்நிலையில், இந்த வழக்கு மூலம் இந்த விவகாரத்துக்கு ஒரு முடிவு காண, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் விரும்புகிறார். கத்தார் வழியாக பயணம் மேற்கொள்ளும் மற்ற பயணிகளும் இத்தகைய சோதனையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
திருமணத்திற்குப் புறம்பாக உறவுகொள்வது அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது கத்தாரில் தண்டனைக்குரிய குற்றமாகும்.