ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக, பிரியா-நடேஸ் தம்பதியர் மற்றும் அவர்களின் குழந்தைகள் பற்றிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், பிரியாவுக்கு 'உமன் ஆஃப் த இயர்' என்ற கௌரவத்தை ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகை ஒன்று வழங்கியுள்ளது.
பிரியா குடும்பத்துக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில், அதற்கு எதிராக இவரது முழு குடும்பமும் போராடியது. ஆஸ்திரேலியாவின் பல தரப்பிலிருந்தும் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது.
இந்தப் பின்னணியில், தம் குடும்பத்துக்காக கடுமையாகப் போராடிய பிரியாவை ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையான மேரி கிளேர் கௌரவித்துள்ளது.
பிரான்சில் 1937ல் தொடங்கப்பட்டு, பல்வேறு நாடுகளில் வெளியிடப்படும் இந்த சஞ்சிகையின் ஆஸ்திரேலிய பதிப்பு, பிரியா உட்பட ஒன்பது பெண்களுக்கும் பிரியா குடும்பத்தின் விடுதலைக்காக போராடிய The Women of Biloela என்ற குழுவுக்கும் தனது டிசம்பர் மாத இதழில் இந்தக் கௌரவத்தை வழங்கியுள்ளது.


