ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவிப்பு
தோக்கியோ: உலகின் 3வது ஆகப்பெரிய பொருளியல் நாடான ஜப்பான், நாட்டின் பொருளியலை தூக்கி நிறுத்தும் திட்டத்தை நேற்று வெளியிட்டது.
சுமார் 56 டிரில்லியன் யென் (S$665 பில்லியன்) மதிப்புள்ள ஊக்கவிப்பு திட்டத்தை நேற்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாடு 3வது முறையாக பொருளியல் மீட்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
"ஜப்பானிய மக்களுக்கு பாதுகாப்பு, நம்பிக்கையை ஏற்படுத்த இது போதுமானதாக இருக்கும்," என்று பிரதமர் கிஷிடா குறிப்பிட்டார்.
பொருளியல் ஊக்குவிப்புத் திட்டத்தை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும்.
பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளின் பெற்றோருக்கு ரொக்கம் மற்றும் பற்றுச்சீட்டுகள், தாதியர் மற்றும் பராமரிப்பு துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஆகியவற்றை ஊக்குவிப்புத் திட்டம் உள்ளடக்கியிருக்கிறது.
முன்னாள் பிரதமர்கள் சுகாவும் ஷின்சோ அபேயும் இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டில் பொருளியலை மேம்படுத்த முறையே 40 டிரில்லியன் யென், 38 டிரில்லியன் யென் நிதியை செலவிட்டுள்ளனர்.
ஆனால் பொருளியலை இது மீட்டெடுக்குமா என்று பொருளியல் நிபுணர்கள் சிலர் சந்தேகம் எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் கொள்ளைநோய்க்குப் பிந்திய சமூகத்திற்கு பொருளியலை நிர்மாணிக்க முடியும்," என்று அமைச்சரவை மற்றும் ஆளும் கூட்டணியின் கொள்கை வகுக்கும் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.
திரு சுகா பதவி விலகியதைத் தொடர்ந்து கட்சித் தலைமையை ஏற்ற திரு கிஷிடா, கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது நாட்டின் பொருளியலைத் தூண்டும் திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
கிருமிப் பரவல் காரணமாக வர்த்தகங்கள் குறிப்பாக மதுபானக் கூடங்கள், உணவகங்கள் மாதக் கணக்கில் தொடர்ந்து செயல்படாமல் தடுமாறி வருகின்றன. ஜப்பானின் எல்லையும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் வரையிலான மூன்று மாத பொருளியல் வளர்ச்சி 0.8 விழுக்காடு சுருங்கியிருப்பதாக அரசாங்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது, பொருளியல் சரிவை தெளிவாகக் காட்டுகிறது. கிருமித்தொற்று வேறு அதிகரித்து உள்ளதால் செலவு, விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டு வர்த்தகமும் சரிந்துள்ளது. ஆனால் அண்மைய மாதங்களாக தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன. தற்போது மூன்றில் ஒரு பங்கு மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். நாடு முழுவதும் கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளன.

